மதுரையில் தோட்டக்காரன், ரவி வசித்து வந்தான்.
தோட்டத்தில், மாங்கன்று நட்டு கவனமுடன் வளர்த்தான். அதில் முதன் முதல் பழுத்த பழத்தை, மன்னருக்கு அளித்தான். அவன் விசுவாசத்தை வியந்து, பணப்பரிசு கொடுத்தார். மன்னர்.
இதைக்கண்ட அண்டை வீட்டுக்காரன் விசு, மிகவும் பொறாமை கொண்டான். பேராசை பிடித்த அவன், ‘உபயோகம் இல்லாத, நாலு மாம்பழத்திற்கு, மன்னர் பரிசு கொடுத்தால், நானும், என் அழகான கன்றுக் குட்டியை, இனாமாக மன்னருக்கு கொடுப்பேன். அவர், உயர்ந்த பரிசு தருவார்’ என எண்ணியபடி அன்று மாலையே புறப்பட்டான்.
மன்னரை சந்தித்து, கன்றுக்குட்டியை வெகுமதியாக ஏற்க வேண்டினான். அவன் பேராசையை அறிந்த மன்னர், ‘நீ வற்புறுத்தியதால் வாங்குகிறேன். அதற்கு பதிலாக, உயர்ந்த மாம்பழங்களை பரிசாக கொடுக்கிறேன்…’ என்றார்.
தோட்டக்காரன் மன்னருக்கு வழங்கிய மாம்பழங்களில் நான்கை கொடுத்து அனுப்பினார்.
பெரும் பரிசு எதிர்பார்த்து சென்ற அவன் எண்ணம் ஈடேறவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். பொறாமை, பேராசையை விட்டொழிப்பது என முடிவு செய்தான் விசு.
கதையின் கருத்து
குழந்தைகளே… பிறர் மகிழ்வதைக் கண்டு பொறாமைப்படக் கூடாது!